சங்கம் ஆரம்பிச்சாச்சு, எப்படியும் நம்மளைதான் தலைவரா தேர்ந்தெடுப்பாங்க, தேர்ந்தெடுத்த உடனே மாலை போடுவாங்க, ஆயிரமா, ஐநூறா இல்ல அம்பது ரூபாயோட நிறுத்திக்குவாங்களா? அப்படி மாலை போடும்போது போட்டோ எடுக்க தயாரா இருக்குற
பலாபட்டறையை எப்படி அப்புறப்படுத்துறது? மாலை போட்ட உடனே மைக்க குடுத்து பேச சொல்லுவாங்களே, என்ன பேசலாம்? அப்புறம் பொன்னாட வேற போத்துவாங்களே, அதெல்லாம் வீட்டுக்கு கொண்டு வர்றதுக்கு? லாரி ஏதாவது தேவைப்படுமா? ஆட்டோ போதுமா? ஒருவேளை தனியா ஒருத்தர் மட்டும் தலைவர்னு கிடையாது, ஒரு குழுதான்னு சொல்லிட்டாங்கன்னா எப்படி போஸ் குடுக்குறது, ரெண்டு பக்கம் நிக்கிற ஆட்களோட கைகோர்த்து நிக்கணுமா? இவங்க தனியா மேடை வேற போடமாட்டாங்களே, நம்ம உயரத்துக்கு யார் பக்கத்துல நின்னு போஸ் குடுத்தா சரியா இருக்கும்? ஒருவேளை நம்மள தலைவரா தேர்ந்தெடுக்கலைன்னா போராட்டம் நடத்த வலையுலக
தாக்கரேவையும் மோடியையும் கூப்பிடலாமா?
உள்ளூர் புலியையும் சிங்கை சிங்கத்தையும் கூப்பிடலாமா?
இதெல்லாம் தான் சங்க கூட்டத்துக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது மனதில் ஓடிக்கிட்டிருந்த கேள்விகள்.
ஆறு மணி கூட்டத்துக்கு அஞ்சே காலுக்கே போய் நின்னா, நம்மக்கு முன்னாடியே அஞ்சாறு பேரு வாசல்ல நின்னுக்கிட்டுருந்தாங்க, அண்ணன் தண்டோரவோட கிளம்பி போய் நாலு பாட்டில் தண்ணி வாங்கிட்டு வந்தேன். சொன்ன சொல் தவறாம சரியா ஆறு மணிக்கு கூட்டத்த ஆரம்பிச்சாங்க. உ.த. அண்ணன் கொண்டு வந்திருந்த சுண்டலை, ச்சே, பேப்பரை எல்லாருக்கும் குடுத்தாரு. படிச்சிட்டு நிமிரும் போதே, அண்ணாச்சி நாமெல்லாம் எதுக்காக கூடி இருக்கோம்னு ஒரு பேருரை நிகழ்த்த தொடங்கி இருந்தார். அவர் பேசி முடிச்சிட்டு மைக்கை அண்ணா சிவராமனிடம் கொடுத்தார், சிதைவுகள்னு ப்ளாகுக்கு பேர் வச்சாலும் வச்சார், என்னோட கனவுகளையெல்லாம் ஜல்லி ஜல்லியா சிதைக்கிற அளவுக்கு ஒரு கேள்வி கேட்டாரு பாருங்க "
எதுக்காக நாம சங்கம் ஆரம்பிக்கணும்?". அப்புடியே, கண்ணுக்கு முன்னாடி ஒரு ஒளிவட்டம் தெரிஞ்சது. அடுத்து சில கேள்விகள் கேட்டாரு, அதுல முக்கியமான ஒன்னை தவிர மத்த எல்லாத்தையும் பத்தி எல்லாரும் பேசினாங்க, அந்த முக்கியமான கேள்விக்கு கடைசியா பேசின நர்சிம் தான் பதில் சொன்னாரு. அது என்னன்னு கடைசில சொல்றேன்.
அடுத்து வந்த ஞாநி பேசினாரு, பேசினாரு, பேசினாரு, ஸ்ஸ்ஸ்ஸபப்பா இதுக்கே எனக்கு மூச்சு வாங்குதே, அவரு அவரோட முப்பத்து வருட தொழிற்சங்க வாழ்க்கை பத்தி பேசிட்டு உக்காந்தாரு. திரும்பவும் எந்திரிச்சு இந்த கூட்டத்தை நடத்த ஒருங்கிணைப்பாளர் அவசியம்னு சொன்னாரு. சொன்னவரு, வரும்போது கோபிக்கிட்ட கேட்டு ஒரு கோட்டு வாங்கிட்டு வந்திருந்தா, நீயா நானாவோட தீவிர ரசிகரான நர்சிம்முக்கு போட்டு அவரையே ஒருங்கிணைக்க சொல்லியிருக்கலாமேன்னு எனக்கு தோணிச்சு. அவரு கேபிள் பக்கத்தில நின்னுக்கிட்டிருந்த என்னை பார்த்துதான் சொன்ன மாதிரி தோணிச்சி, "அய்யா, நானு பேசி களைச்சி போனா எல்லாருக்கும் காப்பி, தண்ணி குடுக்கதான் நின்னுக்கிட்டுருக்கேன்"னு சொல்லலாம்னு நினைச்சேன், அதுக்குள்ளே கடைசி பெஞ்சில் இருந்த கார்க்கி கூப்பிட்டாருன்னு அங்க போயிட்டேன். அப்புறம் வந்த எல்லாரும் பேசினாங்க, பேசினாங்க அவுங்களும் பேசினாங்க, உட்காந்திருந்தவுங்களும் அவுங்களுக்குள்ள பேசினாங்க. எந்த நேரமும் ஏதாவது நடக்கலாம்னு நினைச்ச நான் எஸ்கேப் ஆகுறதுக்கு வசதியா வாசல் பக்கத்தில நின்னுக்கிட்டேன்.
சரி, வெள்ளாட்டு போதும், இப்போ கொஞ்சம் சீரியஸ்
சிவராம் அண்ணன் கேட்ட கேள்விகள் நல்ல ஒரு ஆரம்பப்புள்ளி தான்,
எதுக்காக இப்போ இந்த சங்கம்?
இதுவரைக்கும் என்ன பண்ணிக்கிட்டிருக்கோம்? அதை எதுவாக மாத்தப் போறோம்? அல்லது
இதுவரைக்கும் பண்ணாத எந்த விஷயத்தை புதுசா சங்கம் மூலமா பண்ணப் போறோம்?
இதுக்கப்புறம் ஞாநி கேட்டது இதே தொனியில் தான் இருந்தது,
சங்கம் ஒரு சட்டரீதியான, பதிவுபெற்ற நிறுவனமாக செயல்படுமா?
சங்கம் போராட்டங்களை முன்னெடுத்து நடத்துமா?
சங்கம் உறுப்பினர்களை கட்டுப்படுத்துமா? ஆம் என்றால் எல்லை எது?
அடுத்து பேசிய எல்லாருமே இதை ஒட்டி / வெட்டியே பேசினார்கள்
இப்போ என்னோட (அங்கே கேட்க நினைத்து, நான் நினைத்ததன் சாரத்தை நர்சிம் பேசிவிட்டதால் கேட்காமல் விட்ட) சில கேள்விகள்,
ஆரம்பம் முதல்
எதற்கு சங்கம்? சங்கம் என்ன செய்யப் போகிறது? என்ற தொனியில் பேசிய எல்லாரும் கூறிய ஒரு விஷயம்,
போராட்டம் மற்றும் பிரச்சனைகளை எதிர் கொள்வது,
எனக்குப் புரியவில்லை,
எதற்காக நாம் போராட வேண்டும்? நமக்கு எதையும் எழுதும் கட்டற்ற சுதந்திரம் இருப்பதாக சொன்னார்கள்,
நம்முடைய சுதந்திரம் சினிமா விமர்சனம் வரையிலும், சாரு, ஜெமோ வரையிலும் கட்டற்றதாக இருக்கலாம், அரசியல் பேசினால் ஆட்டோ வரும் என்ற பயம் இல்லாத பதிவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? இப்படி ஒரு சூழலில் போராட்டம் என்பதும், பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதும் முதல் உரிமை கொடுக்கப் பட வேண்டிய விஷயங்களாக எனக்குத் தோன்றவில்லை.
போராட்டத்திற்காக மட்டும் தான் சங்கம் கூட்டவேண்டுமா? சந்தோஷத்தை, ரசனையை பகிர்ந்து கொள்ள சங்கம் கூட்டக் கூடாதா? அது ஒரு காஸ்மோ பாலிட்டன் க்ளப் போல் ஆகிவிடும் என்றால், அதில் என்ன தவறு?
பதிவெழுதுவதையே முழு நேரத் தொழிலாகக் கொண்ட, மாதம் ஒரு லட்சம் வருமானம் ஈட்டும் பதிவர் ஒருவரை IndiBlog பதிவர் சந்திப்பில் சந்தித்ததாகவும், நாமும் முயற்சித்தால் அதை இங்கே நடைமுறைப்படுத்தலாம் என்று லக்கி கூறியது, MLM செய்பவர் குரல் போல பலருக்கு ஒலித்திருக்கலாம், ஆனால் அதை நாம் ஏன் இங்கே நிஜமாக்க முயற்சிக்கக்கூடாது?
தீவிர இலக்கிய ரசனை என்பது சித்த வைத்தியம் போல குறிப்பிட்ட சிலரிடமே தங்கி விடாமல், பரவலாக்கலாமே? நான் சொல்வது பட்டறைகளைப் பற்றி அல்ல, கதை/கவிதை வாசிப்பு, அதை விளக்கி சொல்வது என்று மாதம் ஒரு நாள் செய்யலாமே, உதாரணமாக,
எனக்கு ஜீரோடிகிரி புரியவில்லை அதனால் பிடிக்கவில்லை, அது ஒரு பின்நவீன நாவல், படிம நாவல் என்றெல்லாம் படித்துப் புரிந்து கொண்டவர்கள், எங்களுக்கும் கொஞ்சம் சொல்லலாமே
ரவிசங்கர் சங்கம் வேண்டாம் என்று பேசினார், ஏனென்றால் சும்மா இருப்பதே சுகம் என்றார்,
"அண்ணே இப்பவும் அதே தான் பண்ணபோறோம், சங்கம் ஆரம்பிக்கலாம் ஆனா ஆணி எதுவும் புடுங்கவே வேண்டாம்" (அப்பாடா தலைப்பை கொண்டு வந்தாச்சி),
இன்னொரு விஷயம், தன் கருத்தை சொல்லும்போது, சாமியார் சம்சாரியான கதை ஒன்றைச் சொன்னார், சாமியாரின் கோவணத்தை கடித்த எலியை ஒழிக்கத்தான் பூனை வாங்குவார் சாமியார், அது கடைசியில் சாமியாரை சம்சாரியாக்கி விடும், எதற்காக இதெல்லாம் என்று ஒருவர் கேட்கும் போது சாமியார் சொல்வார் "எல்லாம் ஒரு கோவணத்துக்காகத்தான்". ரவிசங்கர் இதை சொல்லும்போது முதலிலும் முடிவிலும் கோவணத்தை விட்டு விட்டார்,
"அண்ணே, சபை நாகரிகம் கருதி நீங்க அதை நீங்கள் விட்டிருந்தால், ஸாரி, சங்கத்தில் உறுப்பினராவதற்கு முன் உங்களுக்கு நிறைய பயிற்சி தேவைப்படும் :)"
கடைசியாக , சிவராம் அண்ணா முதலில் கேட்ட விஷயம்,
இந்த சங்கம் பதிவர்கள் பெயர், முகவரி, தொடர்பு விபரங்கள் கொண்ட தகவல் தளமாக மட்டுமே செயல்படப் போகிறதா?
அதில் என்ன தவறு இருக்க முடியும்? நம்மில் பெரும்பாலோர் எழுதுவது சுய இன்பத்துக்க்காகத்தான், நான் இங்கே வந்தது ஒத்த ரசனை உள்ள நண்பர்களைத் தேடியும், ரசனைக்குரிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் தான், தற்போது ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாய் இருக்கும் ரசனைகள் ஒரு பெரிய குழுவாக சேர்வதில் என்ன தவறு? நான் சந்திப்புக்கு வரும்போது கவலைப்பட்ட ஒரு விஷயம், அந்த இடம் நமக்கு போதுமா என்பது தான், ஆனால் வந்தவர்கள் வெறும் ஐம்பது பேர்தான் என்பதில் எனக்கு ஏமாற்றமே! இங்கே எத்தனை குழுக்கள் இருக்கின்றன என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
அத்தனை குழுக்கள் பற்றிய விஷயங்களும் ஒரு இடத்தில் இருப்பது பெரியதொரு வசதி தானே. தகவல் தளமாக இயங்கும்பட்சத்தில், அதை நிர்வகிக்கவும், தினம்தோறும் அப்டேட் செய்யவும் ஒரு குழு தேவை தானே அது சங்கமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.
நர்சிம் கடைசியாக பேசும்போது, சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை பற்றியும், அதில் பதிவர்கள் வானம்பாடி ஐயாவும், மருத்துவர் புருனோவும் செய்த உதவிகள் பற்றி சொன்னார். எனக்கு வானம்பாடிகள் ஐயாவை பதிவுகள் மூலம் பழக்கம் என்றாலும் அவரது தொழில் பற்றி எதுவும் தெரியாது. சங்கம் ஒரு தகவல் தளமாக இருந்தால் எதிகாலத்தில் பிரச்சனைகளில் உதவிக்கு ஆள் இருக்கு என்ற நிம்மதி கிடைக்கும்.
எது இல்லாவிட்டாலும், "
பொண்ணு ஓகேதானே மாப்ள, நீ எதுக்கும் கவலைப்படாத, நாங்க நூறு பேர் இருக்கோம்,எத்தனை பேர் வந்தாலும் சமாளிக்கலாம்" என்று சொல்வதற்கு நண்பர் பட்டாளம் இருந்தால் சந்தோஷம் தானே.
அண்ணன் கேபிள் வாங்கிகொடுத்த இட்லியின் சுவையில் மயங்கியபடி இரவு பத்தரைக்கு வீடு வந்து சேர்ந்தேன்
நன்றி
சங்கர்